பழனி மற்றும் காவலப்பட்டியில் முறைகேடாக மணல் ஏற்றி வந்த லாரிகளை வருவாய்த்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முறைகேடாக மணல் ஏற்றி வரும் டிராக்டர்கள், லாரிகள் ஆகியவை ஏராளமாக பறிமுதல் செய்யப்படுவதும் பின்னர் அபராதத்தை கட்டி எடுத்துச் செல்வதும் தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில் ஆற்றுப்படுகைகளில் மணல் திருடப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து வட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பழனி சேரன்ஜீவா நகர் அருகே மணல் ஏற்றி வந்த ஒரு லாரியும், காவலப்பட்டி பச்சையாற்றில் மணல் ஏற்றி வந்த ஒரு லாரியும் பிடிபட்டது. லாரி ஓட்டுநரிடம் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததைத் தொடர்ந்து 2 லாரிகளையும் வட்டாட்சியர் பறிமுதல் செய்து, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்த உத்தரவிட்டார்.