வத்தலகுண்டு அடுத்துள்ள விராலிப்பட்டியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்தலகுண்டு - ஆண்டிப்பட்டி சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், விராலிப்பட்டி கீழத் தெருவில் உள்ள மேல்நிலை தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. கடந்த 3 மாதங்களாக இந்த பணி நடைபெறாததால், குடிநீர் விநியோகம் பாதிப்படைந்துள்ளது.
அதேபோல் பிரதான குழாயிலிருந்து 35 இடங்களில் கணக்கில் இல்லாத இணைப்புகளுக்கு நேரடியாக தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது.
இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. 2 கி.மீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். அந்த தண்ணீர் முழுவதும் சொசுப் புழுக்களாக உள்ளன. இதனால் விராலிப்பட்டி பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என தெரிவித்தனர்.
மறியல் குறித்து தகவல் அறிந்த வத்தலகுண்டு போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.