மாத தொடக்கத்தில் கிடைக்க வேண்டிய ஊதியம் 14 நாள்களாகியும் வழங்கப்படாததால், திண்டுக்கல் மாநகராட்சி ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் அலுவலர்கள், ஊழியர்கள் என மொத்தம் 450 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பிரதி மாதம் ரூ.80 லட்சம் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் 3 நாள்களுக்குள், அந்தந்த பணியாளரின் வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி நிர்வாகம், பணியாளர்களுக்கான ஊதியத்தையும் தாமதமாக வழங்கி வருகிறது.
கடந்த செப்டம்பர் மாத ஊதியம், அக்டோபர் 14ஆம் தேதி வழங்கப்பட்டது. அக்டோபர் மாதத்துக்கான ஊதியம் இதுவரை (நவ.14) வழங்கப்படவில்லை. இதனால், மாநகராட்சியின் அனைத்துப் பணியாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனிடையே, மாநகராட்சி அனைத்து பணியாளர் சங்கக் கூட்டம், தலைவர் ரெங்கராஜ், செயலர் விஜயராகவன், மகளிர் அணித் தலைவர் சாந்தி ஆகியோர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பணியாளர்களுக்கான ஊதியத்தை பிரதி மாதம் 5ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். ஊழியர்களை ஒருமையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்தக் கூட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.