கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியில் பழமையான கல்பாலம் உடைந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
செண்பகனூர் கிராமத்திலிருந்து பிரகாசபுரம், அட்டக்கடி, இருதயபுரம், கொய்யாப்பாறை, வசந்த நகர், கே.பி.என். பாறை, வட்டச்சோலை, சகாயபுரம், ஐயர் கிணறு உள்ளிட்ட குக்கிராமங்களுக்குச் செல்வதற்காக 100-ஆண்டுகளுக்கு முன் கல்பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலம் வழியாக விவசாயிகள் விளைபொருள்களை வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், இப் பாலத்தின் அருகேயுள்ள விநாயகர் ஓடைப் பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் தனியார் கேபிள் பதிப்பதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை தோண்டப்பட்டது. இதனால், சாலை மற்றும் பாலம் பெரும் சேதமடைந்தது.
இது குறித்து அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக மனு அளித்தனர். மேலும், கடந்த 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) தினமணி நாளிதழில் இது சம்பந்தமாக செய்தியும் வெளியிடப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே, செவ்வாய்க்கிழமை கல் பாலம் உடைந்தது. இதனால், அப் பகுதியிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், வாகனங்களில் செல்ல முடியாமல் நடந்தே செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. செண்பகனூரிலுள்ள இந்தப் பாலம் வழியாகத்தான் கொடைக்கானலுக்கு பொதுமக்கள் செல்ல முடியும். தற்போது, இந்தப் பாலம் உடைந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
தற்போது, அப்பகுதியில் நகராட்சிப் பணியாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சேதமடைந்த பாலத்துக்கு அருகே உள்ள விநாயகர் ஓடைப் பகுதியில் மண் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து செண்பகனூர் பொதுமக்கள் கூறுகையில், செண்பகனூர் பகுதியிலுள்ள கல்பாலம் உடைந்துள்ளதால், கடந்த 2 மாதங்களாக பலமுறை நகராட்சி ஆணையரிடமும், மாவட்ட அதிகாரிகளிடமும் சேதமடைந்த கல் பாலத்தையும், சாலையையும் சீரமைக்க வேண்டுமென மனு கொடுத்தோம். ஆனால், யாரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, கல்பாலம் உடைந்துவிட்டதால், பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, விரைந்து பாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.