கொடைக்கானலில் காணாமல் போன கூலித்தொழிலாளியைக் கண்டுபிடிக்கக்கோரும் வழக்கை சிபிசிஐடிவிசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கொடைக்கானலைச் சேர்ந்த பசுபதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
என் கணவர் சேகர் கூலி தொழிலாளி. கடந்த 2012 மார்ச் மாதம் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இருப்பினும் எனது கணவரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து 2014 ஆம் ஆண்டு எனது கணவரை மீட்கக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தேன். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது எனது கணவரை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் எனது கணவரைக் கண்டுபிடிக்காததால், 2016-இல் மீண்டும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தேன். அப்போதும் எனது கணவரை சில மாதங்களில் கண்டுபிடித்து விடுவதாக போலீஸார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வழக்கையும் முடித்துவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், ஐந்து ஆண்டுகள் ஆகியும் எனது கணவரைக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே என் கணவர் மாயமான வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கணவர் மாயமான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டனர்.