மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் நவம்பர் 16 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. சௌந்தரராஜன் தெரிவித்துள்ளதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 4 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளன. கால், கை ஊனமுற்றோருக்கு ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப 50 மீட்டர், 100 மீ. ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி ஓட்டம் ஆகியப் போட்டிகள் நடைபெறும்.
அதேபோல், பார்வையற்றோர் பிரிவில் 50 மீ., 100 மீ. ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், வாலிபால் ஆகிய போட்டிகளும், மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு 50 மீ., 100 மீ. ஓட்டம், ஷாட் பால், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டிகளும் நடைபெறும். காது கேளாதோருக்கான பிரிவில் 100 மீ., 200 மீ., 400 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறும்.
மாவட்ட அளவிலான இப் போட்டியில் முதலிடம் பெறுவோர், மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர். இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 0451-2461162 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.