திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வறட்சி நிவாரணத் தொகையில் முறைகேடு செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நிலக்கோட்டை வட்டம், சேவுகம்பட்டி, ஒருதட்டு ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த கிராமங்களில் கிராம உதவியாளராக பணிபுரிந்து, தற்போது நக்கலூத்து மற்றும் குல்லலக்குண்டு கிராமங்களில் பணியாற்றி வந்த பாண்டீஸ்வரன் மற்றும் விஜயராஜன் ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த முறைகேட்டில், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக விவசாயிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சேவுகம்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி, தற்போது மல்லணம்பட்டியில் பணியாற்றி வரும் முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை திண்டுக்கல் கோட்டாட்சியர் ஜான்சன் பிறப்பித்துள்ளார்.
இதனிடையே, நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தினால் மேலும் பல அலுவலர்கள் சிக்குவார்கள் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.