எதிர்கால இலக்கை நோக்கி மாணவர்கள் பறந்து செல்ல கல்வி என்ற சிறகு அவசியம் என திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் டி.சரளா தேம்பாவணி கூறினார்.
திண்டுக்கல் எம்விஎம் அரசினர் மகளிர் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற 39ஆவது பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வர் பி.பார்வதி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் டி.சரளா தேம்பாவணி கலந்து கொண்டு, 662 பேருக்கு இளங்கலை, 183 பேருக்கு முதுகலை, 42 பேருக்கு எம்.பில் என மொத்தம் 887 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:
படைப்பாற்றல், தன்னம்பிக்கை, தைரியம், உண்மை உள்ளிட்ட பண்புகளை கொண்ட இளைஞர்கள், எதிர்காலம் குறித்து கவலை கொள்ள தேவையில்லை. இவற்றுக்கு எல்லாம் அடிப்படையாக அமைவது கல்வி. சுற்றுப்புறச் சூழல், பெற்றோர்களின் வளர்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களின் கண்டிப்பு ஆகிய மூன்றும் ஒருவரை உண்மை தன்மை உள்ளவராக உருவாக்கும்.
இன்றைய இளைய சமுதாயத்தினரின் தோல்விக்கு, அவர்களிடம் உள்ள தாழ்வு மனபான்மையே முக்கிய காரணம். தாழ்வு மனபான்மையை நீக்குவதற்கு, நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆழ்ந்த சிந்தனை திறன் இல்லாமலும், குறிக்கோள் இல்லாமலும் பயணிக்கும் படகு போல் இளைய தலைமுறையினர் வாழக் கூடாது. சரியான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, கல்வி மூலம் கிடைக்கும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையின் துணையுடன் போராடுபவர்கள் வீழ்வதில்லை. அந்த வகையில், லட்சியத்தோடும், நம்பிக்கையோடும் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு மாணவர்கள் முயற்சிக்க வேண்டும். இலக்கை நோக்கி பறப்பதற்கு கல்வி என்ற சிறகு அனைவருக்கும் தேவை என்றார்.