பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து புதன்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இரு பள்ளி மாணவிகள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு பேரூராட்சி சார்பில் சுகாதாரப்பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாததே காரணம் எனக் கூறி புதன்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நெய்க்காரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நெய்க்காரப்பட்டியில் வீதிகள் தோறும் சுகாதாரப்பணிகள் கண்காணிக்கப்படவேண்டும். பொது சுகாதார கழிப்பிடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.