திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே வியாழக்கிழமை மனைவியை கொலை செய்த கணவர், காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
பழைய வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஹபீப் ரகுமான் (42). இவரது மனைவி ரபியா (38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஹபீப் ரகுமான், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள பள்ளி வாசலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் வியாழக்கிழமை ரபியாவிடம் பணம் கேட்டு ஹபீப் ரகுமான் தகராறு செய்தார். அப்போது ஆத்திரமடைந்த ஹபீர் ரகுமான், கத்தியால் மனைவியை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ரபியாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனிடையே, ஹபீப் ரகுமான், வத்தலகுண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.