கடந்த தேர்தலில் சரியாக பணியாற்றாத திமுக கிளை நிர்வாகிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாது என மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான பெ.செந்தில்குமார் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலர் முருகன் தலைமை வகித்தார். நகர செயலர் சின்னதுரை முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான பெ.செந்தில்குமார் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் 5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 16ஆயிரம் உறுப்பினர் படிவங்கள் வந்து விட்டன. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக, ஜனவரி மாதம் பொதுத் தேர்தல் வர வாய்ப்புள்ளது. அதற்கான முயற்சிகளை சட்ட ரீதியாகவும், ராஜதந்திரத்துடனும் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த தேர்தலின் போது, வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டிருந்த கிளை முகவர்கள் பலர் சரியாக வேலை செய்ய வில்லை. அந்த பகுதிகளில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். கட்சிக்காக தீவிரமாக உழைத்தவர்களுக்கு பதவி கிடைப்பது நிச்சயம். விரைவில் திமுக ஆட்சிக்கு வரும். அப்போது, தொண்டர்களின் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும் என்றார்.