மாநில அளவிலான தூய்மை பள்ளி விருது பெற்ற தேவநாயக்கன்பட்டி அரசுப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் தூய்மை பள்ளிகளுக்கான விருது மாவட்ட, மாநில, தேசிய அளவில் வழங்கப்பட்டது. அதில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள தேவநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாநில விருதினை பெற்றுள்ளது. மாணவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், கை கழுவுதல் பழக்கம், பராமரிப்பு, நடத்தை மாற்றம், திறன் உயர்த்தல் ஆகிய தலைப்புகளின் கீழ் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 100-க்கு 94 சதவீத மதிப்பீடுகளை பெற்று இப்பள்ளி மாநில விருது பெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் தேவநாயக்கன்பட்டி அரசுப் பள்ளி மற்றும் கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி என 2 பள்ளிகளுக்கு மட்டுமே விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து, தேவநாயக்கன்பட்டி பள்ளியின் தலைமையாசிரியர் ஜெ.வையநமசி மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.