செப்டம்பர் மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படாததால், திண்டுக்கல் மாநகராட்சி ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் பொதுப் பிரிவு, குடிநீர், நகர் நலம், பாதாளச் சாக்கடைத் திட்டம், வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அலுவலர்கள், பணியாளர்கள் என சுமார் 450 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களின் ஊதியத்திற்காக மாதம் ரூ.80 லட்சம் ஒதுக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் இதுவரை (அக். 12) வழங்கப்பட வில்லை என்பதால், அனைத்து ஊழியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு நிலைகளில் பணிபுரியும் மாநகராட்சி பணியாளர்கள் கூறுகையில், தீபாவளி பண்டிகையையொட்டி, தனியார் நிறுவன ஊழியர்களுக்குக் கூட செப்டம்பர் மாத ஊதியம், வழக்கத்தைவிட முன்னதாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் பணியாளர்களின் நிலை குறித்து கவனத்தில் கொள்ளவில்லை என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, மாநகராட்சி ஆணையர் ஆய்வுக் கூட்டத்திற்காக வெளியூர் சென்றுவிட்டார்.
பணப் பரிமாற்றத்திற்கு ஆணையர் மட்டுமே கையொப்பமிட முடியும். அதன் காரணமாகவே பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.