பழனி தலைமை தபால் நிலையம், காப்பீட்டுக்கான கணக்கு தொடங்குவதில் தேசிய அளவில் முதலிடத்தையும், சேமிப்புக் கணக்குகள் தொடங்குவதில் மாநில அளவில் இரண்டாமிடத்தையும் பெற்றதையடுத்து பரிசு வழங்கப்பட்டது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய அஞ்சல் வார விழாவில் அஞ்சலகங்களில் சேமிப்பு திட்டம், காப்பீட்டுத் திட்டம், அஞ்சல் தலை மற்றும் கவர்கள் விற்பனை, விரைவுத்தபால் உள்ளிட்டவற்றில் கடந்த 2016-17 ஆம் ஆண்டில் அதிக இலக்கை எட்டியவர்களுக்கு பாராட்டு சான்றுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பழனி தலைமை தபால் நிலையம், பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 5,600 பேரை இணைத்ததற்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றதையடுத்து பரிசு மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன. அதே போல தமிழக அளவில் 13 ஆயிரம் சிறுசேமிப்புக் கணக்குகள் துவங்கியதற்கும், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சுமார் 1000 பேரை இணைத்ததற்கும் இரண்டாம் இடத்தை பெற்றதற்கான பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்கான பாராட்டுச் சான்று மற்றும் நினைவுப் பரிசுகள் பழனி அஞ்சலக தலைமை தபால் அலுவலர் பால்ராஜிடம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து வியாழக்கிழமை பழனி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக துணை அஞ்சல் அலுவலர் பரமசிவம், விற்பனை மேலாளர் சுப்பிரமணியம் மற்றும் அழகர்சாமி, ராஜேந்திரன், தங்கவேல், நாட்ராயன் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.