தீபாவளி பண்டிகையையொட்டி, திண்டுக்கல் உள்பட 11 இடங்களில் சுற்றுச்சூழல் மாசு அளவிடும் கருவி பொருத்தப்பட உள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளதாவது:
பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலி தாற்காலிக செவிட்டுத் தன்மையையும், தொடர் ஓசை, நிரந்தரமான செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே தீபாவளியையொட்டி அக்.17 மற்றும் 18 ஆகிய 2 நாள்களில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், ஓசூர் மற்றும் கடலூர் ஆகிய 11 இடங்களில் ஒலி மற்றும் காற்று மாசு அளவீடு செய்வதற்கு கருவிகள் பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்கக் கூடாது.
125 டெசிபல் அளவிற்கு கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளைத் தவிர்த்து வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை சிறப்பாக கொண்டாட அனைத்து மக்களுக்கும் முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.