திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள சிற்பக் கலைக் கூடத்தில், விஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகள் கலைநயத்துடன் கல் சிற்பமாக வடிக்கப்பட்டு திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் உள்ள ஊதியூர் பெருமாள் கோயிலுக்கு வியாழக்கிழமை அனுப்பப்பட்டன.
பழனி மாசிமலை சிற்பக்கலைக் கூடத்தில், இந்த கோயிலுக்காக பெருமாளின் தசாவதார கோலங்களான மச்சாவதாரம், கூர்மாவதாரம், பூவராகமூர்த்தி, நரசிம்மமூர்த்தி, வாமனமூர்த்தி, பரசுராமமூர்த்தி, பலராமர், ராமர், கிருஷ்ணர், குதிரை வாகனத்தில் கல்கி என அனைத்து அவதாரங்களும் நுட்பத்துடன் வடிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்து சிற்பி நாகராஜன் கூறியதாவது: இந்த தசாவதார சிலைகள் சுமார் 6 அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. இதற்காக 10-க்கும் மேற்பட்ட சிற்பிகள் கடந்த 4 மாதங்களாக பணியாற்றியுள்ளோம். வாமன அவதாரத்தில் குடை, கூர்ம மற்றும் மச்சாவதாரத்தில் செதில்கள், சுவாமி ஆபரணங்கள், நரசிம்மஅவதாரத்தில் ஆக்ரோஷமான சிங்கமுகம் என நுணுக்கமான வேலைப்பாடுகள் சிலைகளில் செய்யப்பட்டுள்ளன என்றார். சிற்பப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து வியாழக்கிழமை சிலைகளுக்கு கண் திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தி திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் உள்ள ஊதியூர் பெருமாள் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.