திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேருந்து நிலையம் மூடப்பட்டதால், பேருந்து நிற்கும் இடம் தெரியாமல் பொதுமக்கள் வியாழக்கிழமை அவதியடைந்தனர்.
வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் ரூ.12 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை வரை பேருந்துகள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனிடையே போக்குவரத்துத் துறை, காவல்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பேருந்துகள் நிறுத்தவும், பயணிகளுக்கு வழிகாட்டவும் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வில்லை. இதனால், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பேருந்துகள் நிற்கும் இடம் தெரியாமல் அவதியடைந்தனர்.
வத்தலகுண்டு மாரியம்மன் கோயில் அருகே நகரப் பேருந்துகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மதுரை சாலை, பெரியகுளம் சாலை மற்றும் திண்டுக்கல் சாலைகளில் நகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. போலீஸார் சார்பில் முன்னறிவிப்பு செய்ய ஒலி பெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கடைசி வரை அந்த ஒலி பெருக்கிகளை பயன்படுத்தி எவ்வித அறிவிப்பும் செய்யப்பட வில்லை. இதனால் பேருந்து எங்கு நிற்கிறது எனத் தெரியாமல் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
இந்நிலையில், பேருந்து நிலையத்தின் நுழைவுவாயிலில் பேருந்து நிலைய பெயர் வளைவு அமைக்க, 16 டன் கான்கிரீட் போடப்பட்டுள்ளது. இந்த கான்கிரீட் உலராதததால், வெள்ளிக்கிழமையும் பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தீபாவளி பண்டிகையையொட்டி, மலை கிராமங்களிலிருந்தும், சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வத்தலகுண்டுவிற்கு வருவது வழக்கம்.
இந்த சூழலில், பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பொதுமக்களும், வியாபாரிகளுக்கும் பாதிப்படைந்துள்ளனர்.