நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் ஓய்வுப் பெற்ற ஊழியரின் தலையீட்டை தடுத்து நிறுத்தக் கோரி நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப சாலை ஆய்வாளர்கள் ஒன்றியம் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.தண்டபாணி தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பிஎஸ்.ஜோதி முருகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் த.பார்த்தசாரதி விளக்க உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு ஆணையின்படி வேலைவாய்ப்பு பெற்ற நபருக்கு, கோட்ட பொறியாளர் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வுப் பெற்ற பணியாளர்களின் தலையீட்டை அனுமதிக்கக் கூடாது. திண்டுக்கல் கோட்டத்தில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொழில்நுட்ப உதவியாளருக்கான தர ஊதியத்தை உயர்த்தி உடனடியாக ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் தெய்வேந்திரன், முத்து பெரியசாமி, இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.