திண்டுக்கல் அடுத்துள்ள சீலப்பாடி ஊராட்சிப் பகுதியிலும் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலும் டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து பகுதியிலும் துப்புரவு முகாம்கள் மூலம் தூய்மைப் பணிகளும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளையும் நடைபெற்று வருகின்றன. கொசு உற்பத்தியாகாமல் இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேவையற்ற பழைய பொருள்கள், குளிர்சாதனப் பெட்டியில் பின்புறத்தில் தண்ணீர் தேங்குவதை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும்.
அதேபோல் கொசுப்புளு குறித்து வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளும் பணியாளர்கள், ஆய்வு செய்த தேதியை சம்பந்தப்பட்ட வீடுகளில் குறிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு சென்ற ஆட்சியர், அங்குள்ள பயன்பாடற்ற டயர்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதேபோல் நுகர்பொருள் வாணிபக் கழகத்திலும் ஆய்வு செய்த ஆட்சியர், தூய்மையை தொடர்ந்து பராமரிக்க உத்தரவிட்டார். அப்போது, சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரிகளும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களும் உடனிருந்தனர்.