திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் சங்க திண்டுக்கல் மாவட்டச் செயலர் ஜி.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலர் சி.பாலசந்திரபோஸ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, நீட் தேர்வை ரத்து செய்ய செய்ய வேண்டும். பொது பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மாணவர்கள் மற்றும் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகரச் செயலர் ஆர்.விஷ்ணு வர்த்தன், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி, பொருளாளர் எம்.சரண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.