திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரத்தில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க புற வழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் லெக்கையன்கோட்டை, கே.அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, கொல்லப்பட்டி, ஒட்டன்சத்திரம், அரசப்பபிள்ளைபட்டி ஆகிய கிராமங்கள் வழியாக 10.1 கிலோ மீட்டர் தூரம் வரை புறவழிச்சாலை அமைக்க, மத்திய தரைவழி போக்குவரத்து துறை திட்டமிட்டது. இதற்காக ரூ.159 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இச்சாலை அமைக்கும் பணிக்காக கடந்த ஆண்டு டிச.7 ஆம் தேதி லெக்கையன்கோட்டை கிராமத்தில் பூமி பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சாலை அமைய உள்ள இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றி வந்தனர். புறவழிச்சாலை அமைய உள்ள ஒரு சில இடங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிர் செய்து இருந்தனர். தற்போது அறுவடை முடிந்த நிலையில், அந்த இடத்தை அதிகாரிகள் கையகப்படுத்தியுள்ளனர். முதற்கட்டமாக காவேரியம்மாபட்டி அருகே விவசாய நிலத்தில் மண் கொட்டப்பட்டு சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.