திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டியில் 18ம் நூற்றாண்டை சேர்ந்த புதிர்க்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தருமத்துப்பட்டியில் ஒரு வீட்டின் முன் எழுத்து போன்ற வடிவத்துடன் பலகைக் கல்வெட்டு கிடைத்துள்ளது. இந்த கல்வெட்டை பேராசிரியர் ஜெரால்டு மில்லர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து நாராயணமூர்த்தி கூறியது: மொத்தம் நான்கு கட்டங்களும், ஒரு முழுமை பெறாத கட்டமும் கொண்டதாக இந்த கல்வெட்டு உள்ளது. கையை எடுக்காமலும், வரைந்த கோட்டின் மீது திரும்ப வரையாமலும் விளையாடப்படும் புதிர் விளையாட்டைப் போல கல்வெட்டின் எழுத்து அமைப்பு உள்ளது. இதன் மேல் சிறிய வட்டமும், இரண்டு "ட' வடிவக் கோடுகளும் உள்ளன.
இந்த புதிர் கல்வெட்டுக்குள் கி.பி.18ம் நூற்றாண்டை சேர்ந்த 247 தமிழ் எழுத்துக்களையும், ஒன்று முதல் பலகோடிகளுக்கும் மேலான முடிவிலா தமிழ் எண்களையும் உருவாக்க முடிகிறது. இதில் சிரமம் ஏற்படும் போது, கல்வெட்டின் மேலே உள்ள குறியீடுகளை இணைத்துப் பார்க்கும் போது எண், எழுத்துக்களை சுலபமாக உருவாக்க முடிகிறது.
தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களையும், எண் வடிவங்களையும் ஒரு கட்டத்துக்குள் அடக்கிய நம் முன்னோர் அறிவுக்கூர்மை பெருமை கொள்ளத்தக்கதாகும்.
புதிரான இந்த கல்வெட்டை அரசு அருங்காட்சியகத்தில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார் அவர்.