திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை அருகே அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சோலைக்காட்டிலிருந்து, திண்டுக்கல்லுக்கு அரசு பேருந்து ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளது. பேருந்தை திண்டுக்கல்லைச் சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி வந்துள்ளார். பேருந்து பன்றிமலை ரெட்டப்பாறை அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து மலைச்சாலையில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த பழைய கன்னிவாடியை சேர்ந்த ஜெயக்கொடி(45) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கன்னிவாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.