பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஏப்.21 ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயில், இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்.21ஆம் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் போது சுவாமி சிம்ம வாகனம், சேஷ வாகனம், அனுமார் வாகனம், மரச்சப்பரம், தங்கக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ரதவீதி உலா எழுந்தருளவுள்ளார்.
விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் தினமும் கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக பட்டிமன்றம், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. வரும் ஏப்.27ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாணமும், ஏப்.29ஆம் தேதி காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெறவுள்ளது.
பெரியநாயகியம்மன் கோயில்: பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஏப்.28 ஆம் தேதி இரவு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி உலாவும், ஏப்.29 ஆம் தேதி காலை 8 மணிக்கு திருஆவினன்குடி கோயிலுக்கு 108 பால்குடங்கள் புறப்பாடும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு வெள்ளிரதத்தில் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி ரதவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொறுப்பு) செல்வராஜ் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.