பழனியில் அனுபவ திரட்டு என்னும் பாரம்பரிய சித்த மருத்துவ நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கலிக்கநாயக்கன்பட்டியில் வாலாம்பிகா அறக்கட்டளை வளாகத்தில் உலக சித்தர்கள் தினவிழா, தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களுக்கு சேவை செய்தவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் சித்த மருத்துவ நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கந்தசாமி தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகி ராதாமணி வரவேற்றார். பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறைத் தலைவர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். விழாவில் ஏராளமான சித்த மருத்துவர்கள், மருத்துவம் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் சித்த மருத்துவர் செல்வராஜ் எழுதிய அனுபவ திரட்டு என்ற மருத்துவநூலை, முதல்வர் கந்தசாமி வெளியிட, தமிழன்னை அறக்கட்டளை நிறுவனர் தமிழரசன் பெற்றுக் கொண்டார். இதில் இந்தியன் நேச்சுரல் தெரபி கவுன்சில் தலைவர் வெங்கடாச்சலம், அரிமா சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் தைப்பூசத் திருவிழாவின் போது பக்தர்களுக்கு சேவை செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.