திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தினமும் 4 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். இங்குள்ள மகப்பேறு சிகிச்சைப் பிரிவில், மாதம் சராசரியாக 500 பெண்களுக்கு பிரசவம் நடைபெறுகிறது. பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும் பெண்களின் உறவினர்களிடம், மருத்துவமனை ஊழியர்கள் பணம் வசூல் நடத்துவதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், மகப்பேறு சிகிச்சைப் பிரிவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வெள்ளிக்கிழமை திடீரென வந்து, ஊழியர்கள் பண வசூலில் ஈடுபடுகிறார்களா என விசாரணை மேற்கொண்டனர். ஆனால், பண வசூல் தொடர்பான எவ்வித ஆதாரங்களும் கிடைக்காததால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கூறியது:
மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு அடித்தட்டு மக்களே சிகிச்சைக்கு வரும் நிலையில், அவர்களிடம் பண வசூல் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.