வடமதுரை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி மணக் கோலத்தில் காத்திருந்த பெண்ணை, அவரது உறவினர்கள் மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்துள்ள செங்கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் மதன்குமார் (24). வேடசந்தூர் அடுத்துள்ள மாத்தினிப்பட்டியைச் சேர்ந்தவர் சுவாதி (22). தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணத்திற்கு சுவாதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், செங்குறிச்சி அடுத்துள்ள திருமலைக்கேணியில் திருமணம் செய்து கொண்டு, செவ்வாய்க்கிழமை மாலை வடமதுரை காவல் நிலையத்தில் பாதுகாப்புக் கோரி அவர்கள் தஞ்சமடைந்தனர். அப்போது காவல்துறை அதிகாரிகளின் வருகைக்காக மணக்கோலத்தில் காத்திருந்த சுவாதியை, அங்கு வந்த உறவினர்கள் காரில் அழைத்துச் சென்று விட்டனர்.
இதுகுறித்து மதன்குமார், வடமதுரை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்துள்ளார். அதில், சுவாதியை அவரது பெற்றோர் மறைத்து வைத்துள்ளதாகவும், மீட்டுத் தருமாறும் அதில் கேட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.