பழனி அருகே புதன்கிழமை பாறைக்குளத்தில் பெண் மர்மமான முறையில் சடலமாக மிதந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பழனி அருகே அமரபூண்டி எவிக்சன் நகரைச் சேர்ந்தவர் தாளிமான் மனைவி அங்காளஈஸ்வரி (45). கடந்த ஒரு வருடம் முன் தாளிமான் இறந்த நிலையில் அங்காளஈஸ்வரி மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில் கடந்த 3 நாள்களாக அவரைக் காணாமல் உறவினர்கள் தேடி வந்துள்ளனர். இதனிடையே புதன்கிழமை மாலை அவர் அமரபூண்டி பாறைக்குளத்தில் சடலமாக மிதந்தார். அப்போது உடலில் பல இடங்களிலும் காயங்கள் இருந்துள்ளன.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ஆய்வாளர் முத்துலட்சுமி வந்து விசாரணை நடத்தினார். பின்னர் சடலம் பழனி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.