ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் கொட்டப்படும் காய்கறிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அவற்றை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு தினசரி பல வகையான காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு, காய்கறிக் கழிவுகள் தினமும் டன் கணக்கில் குவிகின்றன. இந்த குப்பைகள் அனைத்தும் சந்தையின் மையப் பகுதியில் தேக்கி வைக்கப்படும். அவற்றை, நகராட்சி நிர்வாகம் வாரத்தோறும் சனிக்கிழமை அப்புறப்படுத்தும்.
இந் நிலையில், சந்தையின் வடக்குப் பகுதியில் கடந்த சில தினங்களாக தேங்கியுள்ள குப்பை மற்றும் காய்கறி கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், வியாபாரிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பை மற்றும் காய்கறிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.