கொடைக்கானல் பகுதியில் சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்களை நகராட்சி நிர்வாகம் சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் தைக்கால், பிரகாசபுரம் சாலை, அண்ணாநகர், இந்திரா நகர், டிப்போ சாலை, கூலிகாட் சாலை, பாத்திமா குருசடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்கள் சேதமடைந்து அதிக அளவிலான தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. தற்போது, வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படும் நிலையில், நீர் நிலைகளில் தண்ணீர் வற்றத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், குடிநீர் குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதால், மீண்டும் நகராட்சி சார்பில் 15 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சேதமடைந்துள்ள குழாய்களை உடனடியாக சீர்செய்து, தண்ணீர் வீணாவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கொடைக்கானல் நகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகின்றன. இதனால், குழாய்கள் சேதமடைந்துள்ளன. இவை, விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.