பழனிக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு ஆட்சியர் டி.ஜி. வினய் ஒளிரும் கைப் பட்டைகளை புதன்கிழமை வழங்கினார்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரவில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக, கை மணிக்கட்டில் கட்டிக் கொள்ளும் ஒளிரும் பட்டைகள் மற்றும் ஒளிரும் குச்சி ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் இளைப்பாறுவதற்காகவும், ஓய்வெடுக்கவும், தர்மத்துப்பட்டி, கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், ஆயக்குடி ஆகிய பகுதிகளில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காவல் துறையின் ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல்-பழனி சாலையில் பாதயாத்திரை பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள
பேவர் பிளாக் பாதையில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பேவர் பிளாக் வசதி இல்லாத இடங்களில், மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், செம்பட்டி வழியாக பாதயாத்திரைச் செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் மற்றும் குச்சிகளை ஆட்சியர் டி.ஜி. வினய் புதன்கிழமை வழங்கினார். அப்போது அவர், பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் கவனத்துடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.