பழனி சண்முக நதியில் தற்போது அணைகள் திறந்து விடப்பட்டுள்ளதால் அதிக அளவில் தண்ணீர் ஓடுகிறது. இதனால், பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளமானோர் புனிதநீராடி வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை சண்முக நதியின் வடக்குப் பகுதியில் புதர் மண்டியுள்ள இடத்தில் சடலம் ஒன்று நீரில் மூழ்கி இருப்பதைக் கண்ட பொதுமக்கள், பழனி டவுன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சுமார் 40 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க இறந்த நபர் காவி வேட்டி அணிந்திருந்தார். அவர் தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்தாரா எனத் தெரியவில்லை. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.