சிறுமலை மலைச்சாலையில் சனிக்கிழமை சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பழையூரைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி(20). கர்ப்பிணியான இவருக்கு சனிக்கிழமை வளைகாப்பு நடந்துள்ளது. இதற்காக, நத்தம் அருகே உள்ள புன்னப்பட்டியிலிருந்து அவரது உறவினர்கள் சிறுமலைக்கு வந்துள்ளனர்.
வளைகாப்பு முடிந்ததை அடுத்து, ராஜேஸ்வரியை அழைத்துக் கொண்டு, சரக்கு வாகனத்தில் புன்னப்பட்டிக்கு சனிக்கிழமை மாலை உறவினர்கள் 16 பேர் புறப்பட்டுள்ளனர். சிறுமலை மலைச்சாலையில் 2ஆவது கொண்ட ஊசி வளைவு அருகே வந்தபோது, வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ராஜேஸ்வரி உள்பட 15 பேர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி புன்னப்பட்டியைச் சேர்ந்த ஏலம்மாள்(70) உயிரிழந்தார். விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.