பழனி ராஜ ராஜேஸ்வரி அம்மன், உச்சிஷ்ட கணபதி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பழனி மலை, இடும்பன் மலைக்கு மையப்பகுதியில் குருமரபு ஈஸ்வரப்பட்டா சுவாமிகள் வளாகம் உள்ளது. இங்கு புதிதாக ராஜ ராஜேஸ்வரி அம்மன், உச்சிஷ்ட கணபதி கோயில் கட்டப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கிய இவ்விழாவில், ஐம்பதுக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் யாக பூஜை நடத்தினர். சனிக்கிழமை காலை இரண்டாம் கால பூஜையும், மாலையில் மூன்றாம் காலபூஜையும் நடைபெற்றது.
விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் பாரம்பரிய சிலம்பாட்டம், பக்தி இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரவு குருமரபு ஈஸ்வரப்பட்டா சுவாமிகள் உருவப்படத்துடன் வீதியுலா நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்காம் காலபூஜை நடத்தப்பட்டு பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து கரூர் மாவட்டம், அய்யர்மலை புவனேஷ்வரி பீடம் ஸ்ரீபிரணவானந்தா அவதூத மகா சுவாமிகள் தலைமையில் குட்டி ஈஸ்வரப்பட்டா சுவாமிகள் உள்ளிட்டோர் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அதைத்தொடர்ந்து மூலவர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
விழாவில், ஸ்ரீகந்தவிலாஸ் விபூதி ஸ்டோர்ஸ் செல்வக்குமார், சரவணப்பொய்கை ஸ்ரீகந்தவிலாஸ் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, மெய்த்தவம் பொற்சபை மெய்த்தவ அடிகள், ரவிப்பால், யுக்தேஸ்வரானந்தபுரி சுவாமிகள், பாலதண்டாயுதபாணி பேரவை சேகர் சுவாமிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.