புற்கள், களைச் செடிகளால் கொடைக்கானல் ஏரி நீர், மாசடைந்து வருகிறது.
கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கொடைக்கானலில் மழை பெய்தால் அப்சர்வேட்டரி, பாம்பார்புரம், பூங்கா சாலை, செல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து வரும் மழை நீர் ஏரியினுள் சேகரமாகிறது.
இதனால் ஏரி நீர் வற்றாமல் இருந்து வருகிறது. மேலும், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி சென்று வருகின்றனர். பழைமையான இந்த ஏரியைச் சுற்றி 5 கி.மீ.க்கு ஹோட்டல்கள், சாலையோரக் கடைகள், தங்கும் விடுதிகள் உள்ளன.
இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் கலந்து வருகிறது. மேலும் ஏரியின் ஓரத்தில் புற்கள், களைச்செடிகள் செடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கின்றன. நீண்ட நாள்களாக இந்த நிலை தொடர்வதால், பாசிகள் படர்ந்து தண்ணீர் நிறம் மாறி வருகிறது.
இதனால் ஏரி பொலிவிழந்து காணப்படுகிறது. மேலும், ஏரியில் துர்நாற்றம் வீசுவதாகவும், படகு இயக்கும்போது சிரமம் ஏற்படுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம், படகு குழாம் நிர்வாகம் இணைந்து ஏரியைச் சுற்றியுள்ள புற்கள், களைகளை அகற்றி, தூய்மையைப் பராமரிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கொடைக்கானல் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் ஏரியைச் சுற்றியுள்ள தாவரங்கள், புற்கள் ஆகியவை அகற்றப்படும். கொடைக்கானல் ஏரியை ரூ.10 கோடி செலவில் சீரமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.