கொடைக்கானல் வனப் பகுதியில் மலையேற்றப் பயிற்சி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட வன அலுவலர் திங்கள்கிழமை மாலை தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக கொடைக்கானல் மலைப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான குரங்கணியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 10 பேர் இறந்துள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து,
கொடைக்கானல், கேரள மலைப் பகுதிகளில் வழக்கமாக மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிடோருக்கு வனத் துறை தடை விதித்துள்ளது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொடைக்கானல் வனப் பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. அவற்றை கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினர், வனக் குழுவினர், சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், கொடைக்கானல் வனப் பகுதிகளில் பல்வேறு இடங்களில மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள், வெளிநாட்டு, வடஇந்திய சுற்றுலாப் பயணிகள், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் ஆகியோருக்கு, பாதுகாப்பு கருதி ஜூன் மாதம் வரை வனப் பகுதிக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றார்.