பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெண்டை விளைச்சல் அமோகமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான நெய்க்காரபட்டி, காவலப்பட்டி, கரடிகூட்டம் உள்ளிட்ட இடங்களில் செம்மண் வளம் நிறைந்த பூமியாக இருப்பதால், தற்போது இப்பகுதிகளில் பரவலாக வெண்டைக்காய் பயிரிடப்பட்டுள்ளது. நாற்று முளைத்த 45 நாள்களில் பலன்தரும் வெண்டைக்காய், அதிகபட்சமாக 140 நாள்கள் வரை விளைச்சல் தரவல்லது. பழனி சுற்று வட்டாரப் பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட வெண்டைக்காய் தற்போது அறுவடை செய்யப்படுகிறது. தற்போது வெண்டைக்காய் அதிகபட்சமாக கிலோ ரூ.40 வரை விற்கப்படுகிறது. தற்போது, காய்களை பறிக்கும் இடத்துக்கே வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறை வெண்டைக்காய் பறிக்கலாம் என்ற நிலையில், தற்போது நாற்று நடுதல், தண்ணீர் கட்டுதல், காய் பறிப்பு கூலி என அனைத்தும் போக ஒரளவு வருமானம் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.