உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்து குடிநீர் விநியோகம் செய்யக்கோரி வத்தலகுண்டு அருகே கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள விராலிப்பட்டி கிராமத்தில் தெற்குத் தெரு காலனி பகுதியில் குடிநீர் குழாய் உடைந்துள்ளதால், கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதியினர், வத்தலகுண்டு ரெங்கப்பன்நாயக்கன்பட்டி சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
உடைந்துள்ள குடிநீர் குழாய்களை உடனடியாக சரி செய்து, குடிநீர் விநியோகிக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.