மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச முட நீக்கு கருவிகள் அளவெடுத்து வழங்குவதற்கான சிறப்பு முகாம் புதன்கிழமை (மார்ச் 21) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளது: திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, கை, கால் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச முட நீக்கு கருவிகள் அளவெடுத்து வழங்கும் சிறப்பு முகாம், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அகில இந்திய மார்வாடி யுவமஞ்ச் சார்பில் நடைபெறும் இந்த முகாமில், கை கால் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, இலவச முட நீக்கு கருவிகளை பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.