திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலிச்சங்கிலியை வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள குட்டில்நாயக்கன்பட்டி தோட்டத்துச் சாலையில் குடியிருப்பவர் விஜயமணி (50). இவரது மனைவி விஜயா என்ற ராமாத்தாள் (46). இவர்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு தங்களது தோட்டத்துச் சாலையில் உள்ள வீட்டில் உள்ள வாரண்டாவில் தூங்கிக் கொண்டு இருந்தார்களாம். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் விஜயா கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடினர். அப்போது விஜயா சத்தம் போட்டதில், அருகில் தூங்கி கொண்டு இருந்த கணவர் விஜயமணி திருடர்களை விரட்டிச் சென்று பிடிக்க முயன்று உள்ளார். அவரை தாக்கி விட்டு இருவரும் காட்டுப்பகுதியில் ஓடி விட்டார்களாம். இது குறித்து விஜயா அளித்த புகாரின் பேரில் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.