திண்டுக்கல் மாவட்டத்தில் "கஜா' புயலால் 202 இடங்களில் முறிந்து விழுந்துள்ள 1,141 மரங்களை அகற்றும் பணியில் 81 குழுக்களைச் சேர்ந்த 1,110 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் 250 பணியாளர்களுடன் கூடிய 12 குழுவினர், 27 இடங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பழனி கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் 90 பணியாளர்களுடன் கூடிய 16 குழுக்கள் 8 இடங்களிலும், வனத்துறையைச் சேர்ந்த 111 பணியாளர்களுடன் கூடிய 12 குழுக்கள் 7 இடங்களிலும், தீயணைப்பு துறையைச் சேர்ந்த 120 வீரர்கள் 10 குழுக்களாக 41 இடங்களிலும், காவல்துறையைச் சேர்ந்த 143 பேர் 13 குழுக்களாக 7 இடங்களிலும், ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் 396 பணியாளர்கள் 26 குழுக்களாக 96 இடங்களிலும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 110 பொக்லைன் இயந்திரங்களும், 100 இயந்திர மர அறுவை கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.