பழனி அருகே மானூர் சண்முகநதி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய நபரை 5 மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்புப்படை வீரர்கள் வெள்ளிக்கிழமை பத்திரமாக மீட்டனர்.
பழனியை அடுத்த மானூர் அண்ணாநகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (48). இவர் ஆடு மேய்த்து வருகிறார். வெள்ளிக்கிழமை மானூரில் இருந்து சண்முகநதி ஆற்றைக் கடந்து சென்று ஆடுகளை மேய்த்துள்ளார். பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் திடீரென ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வந்துள்ளது. இதை அறியாமல் ஈஸ்வரன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு நடுஆற்றிற்கு வந்தபோது, வெள்ளம் வருவதைப் பார்த்து அங்கிருந்த பாறை மீது ஏறி நின்று கொண்டுள்ளார்.
தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஈஸ்வரனை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. சுமார் ஐந்து மணி நேர போராட்டத்துக்குப்பின் ஈஸ்வரனை தீயணைப்புப்படை வீரர்கள் மீட்டனர்.