கொடைக்கானல் அருகே செண்பகனூரில் 13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு அருகே உள்ள மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வீட்டுக்கு வராதது குறித்து அவரது பெற்றோர் அப் பகுதியில் தேடினர்.
இந்நிலையில் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அப் பகுதியிலுள்ள காட்டு மணி(60) என்பவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர். வீடு திறக்காததால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிறுவன் உடலில் காயங்களுடன் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கியிருந்த காட்டுமணியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் சிறுவனுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிந்து காட்டுமணியைக் கைது செய்தனர்.