பழனியில் அக்டோபர் 22 முதல் 26 ஆம் தேதி வரை பல்வேறு தலைப்பிலான புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
பழனி சண்முகபுரம் தனியார் திருமண மண்டபத்தில், இலக்கியக் களம் சார்பில் இப் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம், பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக இலக்கியக் கள தலைவர் குருவம்மாள் தலைமை வகித்தார். செயலர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கண்காட்சியை சிறப்பாக நடத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கண்காட்சியில் கவிதை, கட்டுரை, இலக்கியம், வரலாறு, ஆன்மிகம், தலைவர்கள் என பல்வேறு தலைப்புகளில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. 20-க்கும் மேற்பட்ட பதிப்பகங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. இதையொட்டி தினமும் மாலையில், கருத்தரங்கம், மாணவ, மாணவியர்க்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
முன்னதாக, புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் நந்திவர்மன் வரவேற்றார்.