ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி, தொழிலாளியின் வலது கை துண்டானது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த எரியோட்டை சேர்ந்த ராமசாமி மகன் சதீஷ்குமார் (24). இவர், ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை சிமென்ட் கலவை இயந்திரத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தாராம். அப்போது, எதிர்பாராமல் வலது கை கலவை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. அருகில் இருந்தவர்கள் சதீஷ்குமாரை மீட்டு, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.