திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் வீடு புகுந்து, மூதாட்டியிடம் 9 பவுன் நகை, பணத்தை மர்மநபர்கள் சனிக்கிழமை பறித்துச் சென்றனர்.
திண்டுக்கல் நந்தவனப்பட்டி அருகே உள்ள பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (80). இவர், மகன் வரதராஜனுடன் வசித்து வருகிறார். சனிக்கிழமை வரதராஜன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் லட்சுமியும், வேலைக்கார பெண் பொன்செல்வி ஆகிய இருவரும் இருந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் வீட்டுக்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி இருவரையும் கை, கால்களை கட்டி வைத்தனர்.
பின்னர், வீட்டில் உள்ள பணம், நகையை தருமாறு மிரட்டியுள்ளனர். இதில் லட்சுமி அணிந்திருந்த 9 பவுன் வளையல், வைரத் தோடு, பீரோவில் இருந்த ரொக்கம் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து இருவரின் கட்டுகளையும் அவிழ்த்துவிட்டனர். இச்சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.