திண்டுக்கல் அருகே துணி உலர வைப்பதற்காக கட்டப்பட்டிருந்த கம்பியை தொட்ட இளம் பெண், எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
ஏ.வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி கேத்ரின் நித்யா (33). தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், வெள்ளோட்டை அடுத்துள்ள கோம்பை அணைப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்றுள்ளார். மதிய உணவு சாப்பிட்டு விட்டு, அருகிலுள்ள வீட்டிற்கு தண்ணீர் வாங்குவதற்காக கேத்ரின் நித்யா சென்றாராம். அப்போது, அந்த வீட்டின் முன்பு துணி உலர வைப்பதற்காக கட்டியிருந்த கம்பியை பிடித்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கேத்ரின் நித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாத்துரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.