பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி, ஆயக்குடி, ஓபுளாபுரம், அ.கலையமுத்தூர், பாப்பம்பட்டி உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பங்கேற்றனர். பழனியில் பாரதி தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பழனி சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
பாப்பம்பட்டி சுகாதார மைய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் குளோரிரூபா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள் பூசி அலங்கரித்து பழங்கள், துணிகள், மங்கலப்பொருள்கள், பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், உணவுப்பழக்க வழக்கம் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. கர்ப்பிணி பெண்களுக்கு எடையளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட மருத்துவ ஆய்வுகள் செய்யப்பட்டது. முன்னதாக குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மதினாபேகம் வரவேற்றார்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் சமுதாய வளைகாப்பு விழா, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் இரா.திருமகள் தலைமை வகித்தார். சமுதாய சுகாதார செவிலியர் கோமதி முன்னிலை வகித்தார்.
விழாவில், தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் அர. சக்கரபாணி கலந்துகொண்டு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். வளைகாப்பு சீமந்தப் பொருள்களான வளையல், கண்ணாடி, மஞ்சள், பழம், பூ உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
அதேநேரம், கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. இதில், சுமார் 160 கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு 5 வகையான கலவை சாதம் வழங்கப்பட்டது.
விழாவில், பகுதி சுகாதார செவிலியர்கள், கே. கீரனூர் கிராம சுகாதார செவிலியர்கள், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.