துரித உணவுகளைத் தவிர்த்து சிறுதானிய உணவுகளை சாப்பிட்டால் மாரடைப்பைத் தடுக்கலாம் என வேலம்மாள் மருத்துவமனை இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஏ.மாதவன் தெரிவித்தார்.
பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் சுயநிதிப்பிரிவு சார்பில் நடைபெற்ற உலக இருதய தின விழாவில் அவர் பேசியது:
உலக அளவில் ஆண்டுக்கு 1 கோடியே 75 லட்சம் பேர் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் மட்டும் 30 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். மாரடைப்பு வராமல் தடுக்க பீசா, பர்கர், புரோட்டா உள்ளிட்ட துரித உணவுகளைத் தவிர்த்து நம் பாரம்பரிய சிறுதானிய உணவுகளையும் பச்சைக் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். மேலும் உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபாடு கொண்டு மனஅழுத்தம் இல்லாமல் இருந்தாலே மாரடைப்பு வராது என்றார்.
முன்னதாக உலக இருதய தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் 300 பேர் இருதயத்தை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்த இருதய வடிவில் நின்றனர். அதில், பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. விழாவில், கல்லூரியின் செயலர் என்.விஜயராகவன் தலைமை வகித்தார்.
கல்லூரி இயக்குநர் ராஜாகோவிந்தசாமி, கல்லூரி முதல்வர் எஸ்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.