மதுரையில் மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி நகைகளை பறித்துச் சென்ற பெண் உள்பட 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலம்மாள்(80). சம்பவத்தன்று இவர் பெரியார் பேருந்து நிலையம் வந்தார். அப்போது இளம்பெண் ஒருவர் பாலம்மாளிடம் அவரது நகையை பாலீஷ் செய்து தருவதாக கூறினார். அவரும் 2 பவுன் நகையை கழற்றி கொடுத்தபோது, அதை எடுத்து கொண்டு அந்த இளம்பெண் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாலம்மாள் போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பகுதியில் வசிப்பவர் முத்துலட்சுமி(60). இவரிடம் இளம்பெண் 3 பவுன் நகையை பறித்து சென்று விட்டார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மாள்(68). இவரிடமும் இளம்பெண் 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க உதவி ஆணையர் சரவணக்குமார் தலைமையில் திடீர்நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேசன், சார்பு ஆய்வாளர்கள் பஞ்சவர்ணம், மரியசெல்வம், அப்துல் அஜீஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
சனிக்கிழமை பெரியார் பஸ் நிலையம் அருகே தனிப்படை போலீஸார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரித்தபோது, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடுகப்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார்(36) என்பதும், அதே வேனில் அமர்ந்திருந்தது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மனைவி மணி (34) என்பதும் தெரியவந்தது. மேலும் மணி தான் மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி அவர்களது நகைகளை பறித்துச் சென்றவர் என்பதும், அவருக்கு ரஞ்சித்குமார் உதவியாக இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மணி, ரஞ்சித்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.